திங்கள், 24 செப்டம்பர், 2012

ஜோதிடம் உண்மையா..


  1. குங்குமம் இதழில் நிருபராக இருந்த சமயம், ஊரில் என் தாய்மாமா இறந்துவிட்டார். நடுத்தர வயதில் அகால மரணம். துக்கத்துக்குப் போயிருந்தேன். கூடி அழுதவர்களில் யாரோ ஒருவர், "ஆயுசு கெட்டி"ன்னு போனவாரம்தானே ஜோசியக்காரன் சொன்னான்" என்று அரற்ற.. எனக்குள் ஸ்பார்க்.
    மரணமடைந்தவரின் ஜாதகத்தை பிரபல ஜோதிடர்களிடம் கொடுத்து பலன் கணிக்கச் சொன்னால் என்ன..
    ஐடியாவை உடனே செயல்படுத்த என் அம்மாவை அணுகினேன். விசயத்தைச் சொன
    ்னேன். அம்மா ரெண்டே வார்த்தைதான் சொன்னது: "செருப்பால அடிப்பேன்!"
    சரி, இது வேலைக்கு ஆகாது... என்ன செய்யலாம்...
    தனது மூன்று வயதில் இறந்துபோன என் தம்பி பாரியின் ஞாபகம் வந்தது. என் பெற்றோரைப் பொறுத்தவரை எதுவும் வீண் அல்ல... நான் உட்பட.
    நம்பிக்கையுடன் பரணில் ஏறி, தம்பியின் ஜாதகத்தைத் தேடினேன். ஊஹீம்... உடம்பு முழுசும் ஒட்டடை படிந்ததுதான் மிச்சம்.
    அன்று இரவு சென்னை திரும்பினேன். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாரிடமும் நாசூக்காக விசாரித்தேன் - "சமீபத்தில் உங்களுக்குத் தெரிந்தவர் யாராவது நடுத்தரவயதுக்காரர் மரணமடைந்திருக்கிறாரா.." என்பதுதான் விசாரணையின் அடி நாதம்.
    பெரும்பாடு பட்டும் கிடைக்கவில்லை. மற்ற பேட்டிகளை எடுத்துக்கொண்டே ஜாதகம் தேடும் முயற்சியையும் தொடர்ந்தேன்.... உ.வே.சா., ஓலைச்சுவடியைத் தேடி அலைந்தமாதிரி! (தமிழன்பர்கள் மன்னிக்க!)
    அப்போதுதான் செல்வம் என்ற என் நண்பர், அவரது நண்பர் ... நடுத்தரவயதுக்காரர்... அகால மரணடைந்ததை எதார்த்தமாக சொன்னார். செல்வத்திடம் என் கோரிக்கையை வைத்தேன். மிகுந்த யோசனைக்குப் பிறகு, "கேட்டுப்பார்க்கிறேன்" என்றார்.
    "கிடைக்குமா கிடைக்காதா" என்ற தவிப்பிலேயே நாட்கள் நகர்ந்தன.
    ஒரு வாரம் ஆகியிருக்கும்... தேடி வந்து ஜாதகம் கொடுத்தார் செல்வம்.
    கிடைத்தது பொக்கிசம்.
    அப்போது மாலன் சார், சிறப்பாசிரியர். அவரிடம் விசயத்தைச் சொல்லி அனுமதி வாங்கினேன்.
    ஜாதகத்தை பத்து பன்னிரண்டு பிரதி எடுத்து, புகழ் பெற்ற ஜோதிடர்களிடம் கொடுத்தேன்.
    "சார், இது ஒரு வி.ஐ.பி. ஜாதகம். இவர் யார், அவரோடு எதிர்காலம் எப்படி இருக்கும்னு சொல்லணும்" என்றேன்.
    ஒரு சிலர், "இப்போ டைம் இல்லையே" என்று ஜகா வாங்கினர். வேறு சிலர், "ஆள் யார்னு தெரியாம ஜாதகம் கணிக்கக்கூடாது" என்று லாஜிக்காக (!) பதில் சொல்லி எஸ்கேப் ஆனார்கள். ஆனாலும் ஐந்தாறு பிரபலஸ்தர்கள் ஜாதகத்தைக் கணிக்க ஒப்புக்கொண்டார்கள்.
    ("என் ஃபோட்டோ போடுவீங்கள்ல.."
    "கண்டிப்பா!")
    ஒரு ஜோதிடர் , "இவர் யார்னு எனக்கு மட்டும் சொல்லுங்களேன்" என்று அடிக்குரலில் கேட்டார்.
    "எனக்குத் தெரியாது சார். ஆபீஸ்ல கொடுத்தாங்க" என்றேன்.
    அடுத்த சில நாட்களில் ஜாதகம் கணித்தவர்களை அணுகி, சேகரம் செய்தேன்.
    ஒருவர், "இவர் ஒரு நடிகர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சூப்பர் ஸ்டார் ஆவார்" என்று கணித்திருந்தார். "இவர் ஸ்போர்ட்ஸ் மேன்" என்று தனது கண்டுபிடிப்பைச் சொல்லியிருந்தார் இன்னெருவர்.
    ஒருவர் கூட யாரும் அந்த "இவர்" செய்த தொழிலையோ, இறந்துவிட்டார் என்பதையோ கணிக்கவே இல்லை.
    அடுத்தவார இதழில்,
    ஜோதிடர்களின் கணிப்புகளை வரிசையாக வெளியிட்டு,
    "உண்மையில் இந்த வி.ஐ.பி. யார்... இத்தனாம் பக்கம் பார்க்க" என்று அறிவிப்பு வைத்தோம்.அந்தப் பக்கத்தில் சம்பந்தப்பட்ட நபர் இறந்துவிட்டார் என்பதைக் குறிப்பிட்டோம்.
    லோக்கல் பஞ்சாயத்திலிருந்து அமெரிக்க ஜனாதிபதி வரை பதவிக்கு வருபவர்களை எல்லாம் "முன்பே கணித்தேன்" என்று, பின்பு விளம்பரம் செய்பவர்கள் அந்த ஜோதிடர்கள்.
    அவர்கள் யாரும் தங்கள் கணிப்புக்கு மறுப்போ விளக்கமோ சொல்லவே இல்லை என்பதுதான் இன்னும் விசேசம்.
    இறந்தவர் ஜாதகத்தை கொடுத்து பேருதவி செய்த நண்பர் செல்வம்தான், தற்போது சிநேகன் என்ற பெயரில் திரைப்பாடலாசிரியராகவும், நடிகராகவும் இருக்கிறார்.

அந்த விநாடி...

மரணத்தைவிட கொடூரமான நிகழ்வுகளை அதே மரணம் ஏற்படுத்திவிடுகிறது. எனது நண்பர் சேலம் ஸ்ரீதரின் தங்கை கணவர் பத்து நாட்களுக்கு முன் அகால மரணம் அடைந்துவிட்டார். அவரது ஏழு வயது மகன் பாசக் குறும்பன். அப்பா மீது தனி காதலே உண்டு அவனுக்கு.
தாங்க மாட்டான் என்பதற்காக, "அப்பா ஊருக்குப் போயிருக்கிறார்கள்" என்று சொல்லிவைத்திருக்கிறார்கள்.
நேற்று அவர்கள் வீட்டுக்குப்போனேன். கட்டிலில், அப்பாவின் புகைப்படம் ஒன்றை அணைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தான். 

எந்த வயதில்... எப்போது, அவன், "அப்பா இல்லை" என்பதை உணருவான்..
அந்த விநாடி எப்படி இருக்கும்...
அதிர்ச்சி அடைவானா, அழுவானா, பொல்லா இயற்கை மீது கோபங்கொள்வானா...
அவனது அந்த கணத்தை நினைத்தாலே நெஞ்சு நடுங்குகிறது.

தள்ளாடிய நினைவுகள்



"அய்யய்யோ!" "சந்தோசம்" "நெசமா" "தொடரட்டும்" "நம்பவே முடியல" "ஏதும் பிரச்சினையா" 

- "குடிப்பதை விட்டுவிட்டேன்" என்றவுடன் நண்பர்கள் ஆற்றிய எதிர் வினை (!)களில் சிலதான் இவை.

நாலு கழுதை வயதில் பத்திரிகையில் வேலை கிடைத்து சென்னை வந்தவுடன் துவங்கியது குடிப்பழக்கம். ஆரம்பத்தில் கட்டிங்தான். நண்பர்களின் ஊக்கப்படுத்தியதால் மெல்ல மெல்ல அதிகரித்தது. பழகப்பழக இனித்தது.

தமிழ் வார இதழ்கள் போலவே, எங்கள் குழாமி
ல், நான்கைந்து "நெம்.ஒன்"கள் இருந்தார்கள். குடிப்பதில் அவ்வளவு போட்டி.

சீக்கிரமே நானும் முதல் நிலைக்கு வந்தேன்.
மாலையில் குடிப்பது நிச்சயம், காலை முதல் குடிப்பது லட்சியம் என்ற கொள்கைப்பிடிப்புடன் வாழ்ந்தேன்.
சினிமா விமர்சனம் ஒன்றுக்கு நான் எழுதிய ஒரு வாக்கியம் பிடித்துப்போய் சாவி சார் ஐம்பது ரூபாய் கொடுத்தார். (பொற்காலம் படத்தில்... :ஊமைப்பெண்ணாக வரும் ராஜேஸ்வரி பேசப்படுவார்: )
நல்ல மனிதனாக இருந்தால் அந்த ரூபாயைப் பத்திரப்படுத்தி வைத்திருக்க வேண்டும்.
நான் அந்த காசிலும் குடித்தேன்.... மேலும் மேலும்!
தொடர்ந்து குடி.
பிச்சைக்காரனுக்கு ஐநூறு ரூபாய் போட்டு... , ஆத்ம நண்பனை அடித்து... :நயம்: குடிகாரன் ஆனேன்.
ஆயிற்று பதினைந்து வருடங்கள். பல பத்திரிகைகள், பல ஊர்கள், பற்பல பார்கள்.
இடையில் என்னையும் நம்பி ஒருத்தி.... வாடிய பயிராய். வயிற்றில் குழந்தை.
எத்தனையோ செருப்படி பட்டபின்னும் தொடர்ந்து குடித்தவன் யோசிக்க ஆரம்பித்தேன். குடியை நிறுத்தினேன். பலரும் சொல்வது போல குடியை நிறுத்துவது ஒன்றும் ஸ்பெக்ட்ரம் அளவுக்கு பெரிய விசயம் எல்லாம் கிடையாது நண்பர்களே....
ஒரு வேளை நீங்கள் குடிப்பவராக இருந்தால்... நிறுத்திப் பாருங்கள்.... மது தரும் போதையை விட, "மனத்தெம்பு" தரும் திருப்தி அலாதியானது.
எனது சந்தேகம் எல்லாம் ஒன்றுதான்.
"மக்கள் புரட்சி செய்யும் மன நிலையில் இருந்தால், ஏராளமான மதுக்கடைகளைத் திற" என்று அர்த்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறானாம் சாணக்கியன்.
புரட்சிக்கோ, கிளர்ச்சிக்கோ வக்கில்லாத தமிழகத்தில் ஏன் இத்தனை சாராயக்கடைகள் என்பதுதான் எனக்குள் சுற்றும் கேள்வி

ஒரு ஞாபக மறதிக்காரனின் டைரிக் குறிப்பு


குமுதம் வார இதழில் நிருபனாக பணியாற்றிய சமயம்.... (1997 அல்லது 8) விழுப்புரம் அருகே பழமையான கோயில் ஒன்றின் அர்ச்சகர், அந்தக் கோயிலை இழுத்து மூடிவிட்டார் என்ற தகவல் கிடைத்தது.
தமிழகத்தின் முதல், "கோயில் கதவடைப்பு". லட்டு மாதிரி செய்தி.
மறு நாளே புகைப்படக்காரர் சித்ராமனியின் ஜூனியரை அழைத்துக்கொண்டு, சென்னையிலிருந்து விழுப்புரம் பயணம் ஆனேன். விடியற்காலையில் புற
ப்பட்டு பத்துமணி சுமாருக்கு விழுப்புரம் வந்தோம்.
சம்பவம் நடந்த குறிப்பிட்ட அந்த ஊர் எங்கிருக்கிறது என்று விசாரித்தால், யாருக்கும் தெரியவில்லை. சரி, அருகில் இருக்கும் கோயில்களில் விசாரிக்கலாம் என்று புறப்பட்டோம். விழுப்புரத்தில் கோயில் கோயிலாக அலைந்தோம். நான்கைந்து கோயில்களுக்கு சென்று விசாரித்ததில், ஒருவர் "அந்த ஊர், விழுப்புரம்- பாண்டிச்சேரி வழித்தடத்தில் இருக்கிறது. குறிப்பாக எங்கே என்று தெரியவில்லை" என்றார்.
. "இது போதும் அய்யா" என்று வணக்கம் வைத்துவிட்டு, மீண்டும் பேருந்து நிலையம் வந்து பாண்டிச்சேரி பேருந்தில் ஏறினோம். நடத்துனரோ, "அப்படி ஒரு ஊரே கிடையாது" என்றார். என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆனாலும் பாண்டிச்சேரிக்கு இரண்டு சீட்டு வாங்கிவிட்டேன்.
பயணத்தின் இடையில் ஏறியவர்கள் அனைவரிடம் அந்த குறிப்பிட்ட ஊரைப் பற்றி விசாரித்தால், நெற்றிச் சுருக்கமும், உதட்டு பிதுக்கலுமே பதிலாக வந்தன.
பாண்டிச்சேரியும் வந்துவிட்டது. என்ன செய்வது என்று புரியவில்லை. ஆனாலும் விசாரிப்பு தொடர்ந்தது. ஒருவர், "விழுப்புரம் - பாண்டிச்சேரி வழிகள் இரண்டு இருக்கு. இரண்டாவது தடத்தில அந்த ஊர் இருக்கு" என்றார். ஆக நாங்கள்தான் வழி மாறி வந்துவிட்டோம்.
சரி, ஊரைக் கண்டுபிடித்தாயிற்று. பிராண்டும் வயிற்றை அடக்குவோம் என்று திட்டமிட்டோம். எங்களுக்குத் தகவல் சொன்னவர், "அந்த தடத்துல வண்டிங்க குறைவு. அதோ கிளம்புது பாருங்க... அந்த வண்டியை விட்டா அப்புறம் நாலு மணி நேரம் ஆகும்" என்று சொல்ல...
பசி மறந்து, ஓடிப்போய் பேருந்தில் ஏறினோம்.
நடத்துனரிடம் ஒரு முறைக்கு நான்குமுறை விசாரித்து சீட்டு வாங்கினேன். புகைப்படக்காரரின் கண்கள் பசி, பசி என்றன. எனக்கும்தான்.
"இறங்கியவுடனே முதல் வேலை சாப்பிடறதுதான்" என்று அவருக்கு ஆறுதலாகச் சொன்னேன்...
குறிப்பிட்ட நிறுத்தத்தில் பேருந்து நிற்க, இறங்கிய எங்களுக்கு அதிர்ச்சி.
இரு புறமும் வெறும் வயல்காடு. டீ கடை கூட கிடையாது. நாம் வர வேண்டிய ஊர் இதுதானா என்று சந்தேகம் வேறு வயிற்றைப் பிசைய ஆரம்பித்துவிட்டது.
அப்போது இந்த செல்போன் கருமம் எல்லாம் அவ்வளவாக பிரபலம் கிடையாது. யாரை விசாரிப்பது என்று புரியாமல் தவித்து நின்றோம்.
கொஞ்ச நேரத்தில் அந்தப் பக்கமாக தலைச்சுமையுடன் ஒரு பெரியவர் வர, அவரிடம் விசாரித்தோம்.
"அந்த ஊரா, அது இப்படியே ரெண்டு கல்லு தொலைவு போகணும்" என்றார்.
"நடப்போம்" என்றேன் புகைப்படக்காரரிடம். தலைச்சுமைக்காரர் ரெண்டு கல்லு என்றார். ஆனால் வழி எல்லாம் கல்லுதான். நொந்து நூலாகி, ஊர் வந்து சேர்ந்தோம். பத்து, பதினைந்து வீடுகள் இருக்கும். அர்ச்சகர் வீட்டை விசாரித்துப் போனோம். ஜன்னல் உடைந்த ஓட்டு வீடு. இரண்டு முறை குரல் கொடுத்த பிறகு பதினேழு பதினெட்டு வயது பெண் ஒன்று எட்டிப் பார்த்தது. விவரத்தைச் சொல்லி, "அர்ச்சகரை பார்க்கணும்" என்றேன்.
"அப்பா வெளியே போயிருக்காங்க" என்ற அந்த பெண், இரண்டு தடுக்குகளை எடுத்து திண்ணையில் போட்டு "உட்காருங்க" என்றது. மீண்டும் உள்ளே சென்று இரண்டு குவளைகளில் நீர் எடுத்து வந்து கொடுத்தது.
பசி, தாகம், அலைச்சல்... எல்லாம் சேர்ந்து உடலே சோர்ந்திருந்தது. தண்ணீர் குடித்ததும் கொஞ்சம் உயிர் வந்தது.
"இந்த அர்ச்சகர் எப்போ வருவாரோ" என்ற சிந்தனையோடு, பக்கத்தில் இருந்த அந்த குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்றோம். புகைப்படங்கள் எடுத்தார் போட்டோகிராபர். நான், அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கோயிலை கதவடைப்பு செய்ததற்கான காரணங்களை கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டேன். மீண்டும் அர்ச்சகர் வீட்டுக்கு வந்தோம். அவர் வந்தவுடன் பேட்டி எடுத்துவிட்டு, விழுப்புரம் போய் நன்றாக சாப்பிட வேண்டும்.
பையில் பணம் இருந்தாலும் பட்டினியாய் கிடப்பது பத்திரிகை வாழ்வில் சகஜம்தான். ஆனால் அன்று ஏனோ எல்லை கடந்த பசி.
நாங்கள் திண்ணையில் உட்கார்ந்திருக்க... வீட்டில் ஏதோ பாத்திரங்கள் உருளும் கடமுடா சத்தம். கொஞ்ச நேரத்தில் கமகம வாசனை... நானும் புகைப்படக்காரரும் ஒருவரை ஒருவரை பார்த்துக்கொண்டோம்.
ரெண்டு பேரு பசியில காயிறோம். மணக்க மணக்க சாப்பாடு உள்ளே... என்கிற எண்ணம்தான். பசியோடு சேர்ந்து எரிச்சலும், கோபமும் அதிகமாகிக்கொண்டே வந்தது.
அர்ச்சகர் வந்துதொலைக்கட்டும் என்று இருவரும் காத்திருந்தோம். அவர் வருதாயில்லை. பத்து பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும், மீண்டும் வீட்டுக் கதவு திறந்தது. அந்தப் பெண்தான்.
"வாங்க" என்றது. "பின்பக்க வழியாக அர்ச்சகர் வந்திருப்பாரோ" என்ற நினைப்பில் நானும் புகைப்படக்காரரும் உள்ளே செல்ல... இரண்டு தடுக்குகள் போடப்பட்டு எதிரே வாழை இலையில் உப்புமாவும் ஓரத்தில் வெள்ளை சர்க்கரையும் வைக்கப்பட்டிருந்தன.
அந்நிய வீட்டில் சாப்பிடச் சொன்னால் பிகு பண்ணும் ரகம்தான் நாங்கள். ஆனால் எதுவும் பேசாமல் உட்கார்ந்து சாப்பிட்டோம், சாப்பிட்டோம், சாப்பிட்டோம்.
சாப்பாட்டு வகையில் என் பிளாக் லிஸ்டில் முதலிடம் வகிப்பது இந்த உப்புமாதான். எனக்கு பயந்தே அம்மா உயிரோடு இருந்தவரை உப்புமா செய்ததே இல்லை.
இன்று ருசித்தது.
சாப்பிட்டு முடித்தவுடன் வயிறோடு சேர்ந்து மனமும் நிறைந்திருந்தது எங்களுக்கு. அந்த பெண், எங்களிடம் "சாப்பிடுறீங்களா" என்று கேட்கவே இல்லை. எங்கள் முகம் பார்த்து பசி உணர்ந்திருக்கிறது அந்த சின்னப் பெண். பசியில் கிடந்து பிறகு அள்ளி அள்ளித்திண்ணும் அனுபவம் எனக்கு அடிக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உப்புமா அளவுக்கு எதுவும் எனக்கு திருப்தி தந்ததில்லை.
பிறகு அர்ச்சகர் வந்தார் அவரிடம், கோயிலை அடைத்ததுக்கான காரணம் கேட்டேன். பல மாதங்களாக அறநிலையத் துறையிலிருந்து சம்பளம் வரவில்லை என்றார். அவரது மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா, இருநூறோ முன்னூறோ... அதோடு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சில நெல் மூட்டைகள் தரப்படுமாம். தற்போது அதுவும் வராத நிலையில், கோயிலை கதவடைப்பு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
இப்போது அந்தப் பெண் மீது எனக்கு இன்னமும் மரியாதை கூடியது. கடும் வறுமையிலும் எங்களுக்கு சாப்பாடு போட்டிருக்கிறது.
பெயர் என்ன என்று கேட்டேன். பத்மா என்று சொன்னது.
பிறகு நாங்கள் கிளம்பி வந்துவிட்டோம். அடுத்த வாரம் குமுதம் இதழில் அர்ச்சகரின் பேட்டி கட்டுரை வெளிவந்தது.
பொதுவாகவே நான் அடுத்தடுத்த வாரங்களிலேயே வாழ்கிறவன். எடுத்த பேட்டி பற்றி ஃபீட் பேக் கேட்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதில்லை. அடுத்த இதழு்க்கான பேட்டி கட்டுரைகள், அதற்கான ஆட்கள் என்று என் தேடல் துவங்கிவிடும். ஆகவே அந்த ஊர், அர்ச்சகர் பெயர் எல்லாம் மறந்துவிட்டேன்.
பத்மா என்கிற அந்த சிறு பெண்ணை... தாயை... மட்டும் மறக்கவே முடியவில்லை